Bible Study வேத ஆராய்ச்சி

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம்

நிலைநின்றால் . . .

பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே (எபிரேயர் 3 : 1) . . .

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். 

                இயேசு கிறிஸ்து நம்மை எதற்காக அழைத்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  “தேவன் நாம் இயேசுகிறிஸ்து அடைந்த மகிமையை அடையும்படிக்கு நம்மை அழைத்தார்’. (2 தெச. 2 : 14.)  அதற்காக மாத்திரமல்ல; “உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (1 பேதுரு  2 : 9).  மேலும், ஜாதிகளின் மேல் நாம் அரசாளப் போகிறோம் (வெளி. 2 : 26, 27).  ஆதலால், நாம் சாதாரண மனிதர்கள் அல்ல. தேவன் நமக்கொரு நல்நோக்கம் கொடுத்திருக்கிறார்.  நாம் அதை உணர வேண்டும்.

                ஆதலால், நாம் முடிவுபரியந்தம் நிலைநின்று ஜெயங்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். 

ஜெயங் கொண்டால் தேவன் நமக்கு  தருகிறவைகள். . .

                1. ஆதாம் என்றென்றும் உயிரோடிருக்கக் கூடாது என்று விலக்கின உயிர் வாழ்வளிக்கும் (ஜீவ விருட்சத்தின்) கனியை (ஆதி. 2 : 22, 23) நமக்கு புசிக்கக் கொடுப்பார்.  இதனால் நித்திய காலமும் உயிரோடிருக்கும் தன்மையை நமக்குள் எற்படுத்துவார்.  (வெளி.  2 : 7).

                2. இரண்டாம் மரணத்திருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வார் (வெளி. 2 : 11).  இரண்டாம் மரணம் எது?  அப்பொழுது, மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப் பட்டன; இது இரண்டாம் மரணம். (வெளி. 20 : 14).  மேலும், ஜீவ புத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன், மற்றும் பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும்,  சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள். (வெளி. 20 : 15).  முதல் மரணம் எல்லாருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது.  ஜெயங்கொண்டவர்களாயிருந்தால் இரண்டாம் மரணத்தின்று நம்மை விடுவிப்பார்.

                3. மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுப்பார்.  மேலும், வெண்மையான குறிகல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய பெயரை (நாமத்தை)யும் கொடுப்பார்.  ( வெளி. 2 : 17).

                4. பிதாவினிடத்தினின்று இயேசு அதிகாரம் பெற்றது போன்று ஜாதிகளை ஆள நமக்கு அதிகாரம் தருவார்.  ஆதலால், நாம் ஜாதிகளை ஆண்டு கொள்வோம்.  (வெளி. 2 : 26, 27)

                5. நமக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்.  ஜீவபுஸ்தகத்திலிருந்து நம்முடைய பெயரை (நாமத்தை) தேவன் கிறுக்கிப்போடாமல், தன் பிதாவாகிய கர்த்தருக்கு முன்பாகவும், தூதர்களுக்கு முன்பாகவும் நம்முடைய பெயரை (நாமத்தை) அறிக்கையிடுவார்.  (வெளி. 3 : 5).  எத்தனை பெருமையான விஷயம் இது.  இந்த உலகத்தில் தேவனின் நாமத்தை உயர்த்தி பிடிக்கும் நம்மை தேவன் அந்நாளில் உயர்த்திக் காட்டுவார்.

                6. தேவன் நம்மை ஆலயத்தின் தூணாக்குவார்.  அதிலிருந்து நாம் நீக்கப்பட மாட்டோம்.  மேலும், தேவனுடைய நாமத்தையும், பரலோகத்திலிருந்து இறங்கி வருகிற புதிய எருசலேமின் நாமத்தையும், புதிய பெயரையும் (நாமத்தையும்) நம்மேல் எழுதுவார். (வெளி. 3 : 12).

                7. இயேசு பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்காருவது போல, நாமும் இயேசுவினுடைய சிங்காசனத்தில் அவரோடே உட்கார அருள் செய்வார். (வெளி. 3 : 21). 

                அப்படிப்பட்ட நன்மைகளை இயேசுகிறிஸ்து நமக்கு வாக்களித்திருக்கிறார்.  ஆதலால், நம்முடைய இரட்சிப்பைப் பாதுகாத்து, நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். (எபி. 3 : 14).

  • இரா யோவான்காந்தி
Yovan
R. Yovan Gandhi, Evangelist, live in Chennai, India
Bible Study வேத ஆராய்ச்சி

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் ‘‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் ’’ என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் 2:16,17.

ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம் அவன் மரித்தான். ஆதியாகமம் 5:4

புசிக்க விலக்கின நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஆதாமும் ஏவாளும் புசித்தார்கள். (ஆதியாகமம் 3 : 6 பிற்பகுதி ஆனால் புசித்த அன்று அவர்கள் சாகவில்லை. ஆனால் 930 வருடம் உயிரோடிருந்தான். கர்த்தர் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொன்னதால், இந்த இடத்தில் கர்த்தர் பொய் சொன்னது போன்று தோன்றும். கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள் இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது (ஏசாயா 34 :16)

இந்த பகுதியின் விளக்கம் புதிய ஏற்பாட்டில் உள்ளது. பிரியமானவர்களே கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம் (2பேதுரு 3:8) கர்த்தருடைய ஒரு நாள் மனுஷனுக்கு ஆயிரம் வருஷம். கர்த்தர் தான் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றார். ஆதலால் மனுஷன் ஆயிரம் வருஷத்திற்குள் சாக வேண்டும். அதன்படி, ஆதாம் 930 வருஷம் மட்டுமே உயிரோடிருக்க  முடிந்தது. அவர் மட்டுமல்ல வேதத்தில் அதிக வருடம் உயிரோடிருந்தவர் மெத்தூசலா.  அவரும் 969 வருடம் வரை தான் உயிரோடிருந்தார். (ஆதியாகமம் 5:27) யாரும் 1000 வருடத்திற்கு மேல் உயிரோடிருக்கவில்லை.  கர்த்தர் பொய் சொல்லவில்லை. ‘‘ பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல மனம் மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா?  அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?’’ (எண்ணாகமம் 23 :19)

  • இரா யோவான்காந்தி
Yovan
R. Yovan Gandhi, Evangelist, live in Chennai, India
Bible Study வேத ஆராய்ச்சி

பொருளாதாரம் செழிக்க மற்றும் ஒரு வழி. தசமபாகத்தை குறித்து தவறான கருத்துக்களை பரப்பிவிடுபவர்கள் முளைத்து உள்ளதால் அதைக் குறித்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தசமபாகம் என்பது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.  காட்டொலிவ மரமாகிய புறஜாதியாராகிய நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார்.  ஆதலால் நாமும் தசமபாகம் செலுத்தலாம்.

புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை என்று கூறுகிறார். மேலும் இயேசுகிறிஸ்து இன்னும் அதிகமாக வலியுறுத்தி நியாயப் பிரமாணத்தை கடைப்பிடிக்க சொல்லுகிறார். 

எப்படியெனில் மத்தேயு 5:21 ‘‘ கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலை செய்கிறவன்  நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்”.

அதாவது பூர்வத்தாருக்கு (கொலை விபசாரம்) செயல்களையே செய்யக் கூடாது என்று குறிப்பிடுகிறார்.  ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோ வார்த்தைகளுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் கொடுத்த கட்டளை

1. கொலை செய்யக் கூடாது (யாத். 20, மத்.5:21)

2. விபசாரம் செய்யாமல் இருப்பாயாக (மத்.5:27)

3. சத்தியம், பொய்யாணை இடாமல் உன் ஆணைகளை கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக (மத்.5:33)

4. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்

இயேசு அதற்கு மேலும் வலியுறுத்தி சொல்லுவது

கொலையும் செய்யக் கூடாது, சகோதரனை மூடன் என்று சொல்லக் கூடாது, வீணன் என்று சொல்லக்கூடாது.

விபச்சாரம் செய்யக்கூடாது …. பெண்ணை இச்சையினாலும் பார்க்கக்கூடாது.

சத்தியம் பண்ண வேண்டாம்…. உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும்.

தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். (மத்.39)

இயேசு வலியுறுத்துகிற காரியம்

செய்கையில் மட்டுமல்ல…. வார்த்தைகளையும் நாம் காக்க வேண்டும்.

பார்வையில் சுத்தமாக இருக்க வேண்டும்.

வார்த்தையை காக்க வேண்டும்.

நல்நடக்கையை காத்து கொள்ள வேண்டும்.

பரிசேயர் சதுசேயர் செய்தது

1.(மத்.6:1) ஆலயங்களிலும் வீதிகளிலும் தர்மம் செய்தது. (மத். 6:3)

2.மனுஷர் காண வேண்டும் என்று செய்வது.

3.மனுஷர் காணும்படியாக ஜெப ஆலயத்திலும், வீதிகளின் சந்துகளிலும் ஜெபம் பண்ணினார்கள்.

3  ஜெபம் பண்ணும்போது அதிக வசனங்கள் வேண்டாம்.

4. உபவாசிக்கும்போது முகவாடலாய் இருந்து மற்றவர்கள் நான் உபவாசிக்கிறேன் என்று காட்டுவது. (மத்.6:16)

மேலும் பழைய ஏற்பாட்டுமக்களுக்காக கூறப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கு பழைய ஏற்ப்பாட்டின் விசுவாசிகளை விட கூடுதலாக செய்ய வாக்கிலும், நடக்கையிலும், எண்ணத்திலும் நம் ஆண்டவர் நன்மை செய்ய அழைக்கிறார்.

நீயோ தர்மம் செய்யும் போது வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது.

காணிக்கை செலுத்தும் போது சகோதரனுடன் ஒப்புரவாக வேண்டும். (மத்.5:25)

வீட்டுக்குள் சென்று அந்தரங்கத்தில் உள்ள பிதாவுக்கு மட்டும் தெரியவேண்டும்.

வீண் வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம்.

அந்தரங்கத்தில் பிதா காணும்படி உபவாசிக்க வேண்டும். ஆதலால் தலைக்கு எண்ணெய் பூசி, முகத்தை கழுவ வேண்டும்.

அந்தரங்கமாக தர்மம் செய்ய வேண்டும்

நல்மனத்துடனே பாவம் இல்லாமல் ஒப்புரவாகுதலுடன் காணிக்கை செலுத்த வேண்டும்.

மறைமுகமாக ஜெபித்து வல்லமை பெற வேண்டும்.

நம் தேவைகளை தேவன் அறிந்ததினால் சுருக்கமாக தெரிவிக்க வேண்டுகிறார்.

உபவாசிக்கும் போது மிகுந்த உற்சாகமாக இருக்க வேண்டும்.

இங்கும் அந்தரங்கத்தில் பார்க்கிற தேவனுக்கே உபவாசம் இருக்க வேண்டும்.

  • இரா யோவான்காந்தி
Yovan
R. Yovan Gandhi, Evangelist, live in Chennai, India
Bible Study வேத ஆராய்ச்சி

நாம் பல நேரங்களில் நம்மை மறந்து போனவர்களை குறித்து வருத்தப்பட்டு கொண்டிருப்பது உண்டு. எத்தனை உதவிகள் நான் செய்தேன். ஆனால் என்னை மறந்து விட்டார்களே! என்று புலம்புவதும் உண்டு.

இவன் பானப் பாத்திரக்காரனின் தலைவன் எகிப்து இராஜாவுக்கு குற்றம் செய்தவன். அதனால் கோபம் கொண்ட இராஜா சிறையில் அடைத்தான். அங்கு யோசேப்பை கண்டான். அப்பொழுது பானப் பாத்திரக்காரனின் தலைவன் கனவு கண்டான். அந்த கனவின் அர்த்தத்தை யோசேப்பு வெளிப்படுத்தினான்.
அந்த கனவின் அர்த்தத்தின்படி பானப்பாத்திரத் தலைவன் திரும்பவும் இராஜாவுக்கு பானம் கொடுக்க மீண்டும் உயர்த்துவார் என்று யோசேப்பு வெளிப்படுத்தினான். மேலும் பானப்பாத்திரக் காரனின் தலைவன் வாழ்வடைந்திருக்கும்போது தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக் கேட்டுக்கொண்டான்.

அதன்படி பானப்பாத்திரத் தலைவன் தன்னுடைய பணிக்கு திரும்பினான். ஆனால் யோசேப்பை மறந்து விட்டான். (ஆதியாகமம் 40).

இங்கும் அகாஸ்வேரு ராஜாவின் 2 பிரதானிகளாகிய பிக்தானும், தேரேசும் (எஸ்தர் 2:21) இராஜாவை கொலை செய்ய வகை தேடினார்கள். இது மொர்தெகாய்க்கு தெரியவந்து எஸ்தர்ராணியிடம் கூறினார். இதை விசாரித்த போது உண்மை என்று கண்டு அவ்விருவரையும் தூக்கிலிடப்பட்டார்கள். இராஜாவைக் காப்பாற்றியவர் மொர்தேகாய். இது இராஜ சமூகத்திலே நாளாகமப் புத்தகத்திலே எழுதப்பட்டது. ஆனால் மொர்தேகாய்க்கு எந்தவித பாராட்டும் தெரிவிக்க ராஜா மறந்தார் (எஸ்தர் 2:21*23)

பல நேரங்களில் நன்மை செய்து சோர்ந்து போயிருக்கும் சகோதர, சகோதரிகளே ! மனிதர்களுடைய இயல்பு நன்மை செய்வதை மறந்து விடுகிறது. ஆனாலும் தேவன் நம் பட்சமாக இருந்தால் மறந்து போன தையும் நமக்கு சாதகமாக மாற்றுவார். நாம் நன்மை செய்வதினிமித்தம் நம்மை உயர்த்துவார்.

ஒருவேளை நாம் நன்மை செய்த உடன் பலனை எதிர்பார்த்தால் பலன் சிறியதாக இருக்கலாம். மறந்து போன பானப்பாத்திரத் தலைவன் யோசேப்பை மறக்காமல் ராஜாவிடம் கூறி காப்பாற்றி இருந்தால் எகிப்தில் பிச்கைக் காரனாக இருந்திருப்பான். அல்லது யாக்கோபை (அப்பா) தேடிச் சொந்த வீட்டுக்கு போயிருக்க வேண்டும்.

அது அல்ல தேவனுடைய சித்தம் 18 வயதில் கனவு கண்டானே யோசேப்பு அது நிறைவேண்டும். அதனால் அவனை உயர்த்துவதற்காக பானப்பாத்திரத் தலைவனுக்கு மறதி ஏற்படுத்தினார்.

ராஜாவை காப்பாற்றியதற்காக மொர்தெகாய்க்கு பரிசுகள் கிடைத்திருக்கும். ஆனால் ஆமான் மொர்தெகாய்க்கு விரோதமாக தூக்குமேடை செய்து அதில் மொர்தெகாயை போட அனுமதி கேட்க வருவதற்கு முந்தைய நாள் ஆகாஸ்வேரு இராஜாவுக்கு தூக்கம் வராமல், நாளாக புத்தகத்தை வாசித்தபோது மொர்தெகாய் தன்னை காப்பாற்றியதை அறிந்து கொண்டார்.

தக்கசமயத்தில் தேவன் இராஜாவுக்கு ஞாபகப் படுத்தினார். ஆமான் மொர்தெகாயை தூக்கிலிடும்படி அனுமதி கேட்க வந்தான். ஆனால் இராஜாவோ மொர்தெகாய்க்கு ஆமானையே மரியாதை செலுத்த திருப்பி அனுப்பினார். இது தேவனால் உண்டான காரியம்.

ஒருவேளை நாம் கூட ஆபத்தில் சிக்க நேரிடும்போதும் நம்மை கொல்ல எதிரிகள்
பலப்படும்போதும் தேவன் அங்கு செயல்பட்டு காரியத்தை மாறுதலாய் மாற்றுவார். அதற்கு காரணம் மொர்தெகாய் செய்த உதவி.

தேவனுடைய ஜனமே தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற யாரையாவது அனுப்புவார். அவர்கள் நம்மை மறந்தவர்களாகவும் இருக்கலாம்.

ஆதலால் நன்மை செய்ய நாம் சோர்ந்து போகாமல் இருப்போமாக. ‘உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் ‘‘‘.(பிரசங்கி 11:1)

நம்மை மறந்தவர்கள் இப்போதைக்கு நம்மை மறந்தவர்களாவார்கள். அவர்களை தக்க சமயத்தில் ஞாபகப்படுத்தி தேவன் அனுப்புவார்.

  • இரா யோவான் காந்தி
Yovan
R. Yovan Gandhi, Evangelist, live in Chennai, India
Bible Study வேத ஆராய்ச்சி spiritual news, ஆவிக்குரிய தகவல்கள்

தேவ ஊழியமும் ஊழியர்களும் இன்றைய காலக் கட்டத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சீர்த்தூக்கி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் அனைவரும் கடைசி காலங்களில் வாழ்ந்து வருகிறவர்கள். ஆகவே கடைசி காலங்களில் ஊழியர்களும் அவர்தம் பணிகளும் எப்படி இருக்கும் என்பதைக் குறித்த வெளிச்சத்தை தேவனாகிய கர்த்தர் ஆவியானவர் மூலமாக தெளிவாக வேதாகமத்தின் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே நாம் ஜாக்கிரதையாக தெளிந்து உணர்ந்து செயல்ப் படுவது நல்லது அவசியமும் ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையும் அவர் செய்த ஊழியங்களுமே நமக்கு மாதிரிகள். “ நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படிக்கு உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”. யோவான் : 13 : 15 அதே நேரத்தில் இன்னுமொரு உண்மையையும் நமக்கு சொல்லிப்போயிருக்கிறார் அது என்னவென்றால், “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்”. யோவான் : 13 : 15

ஆரம்பக்கால ஊழியங்களும் ஊழியர்களும் வேறு இப்போது இருப்பவையோ முற்றிலும் வேறானவை. இப்போதிருக்கும் ஊழியங்களும் ஊழியர்களும் எப்படி இருக்கக்கூடாதென்பதற்கு வேண்டுமானால் சான்றாக கொள்ளுமளவிற்கு இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிலைமைகள் மோசம் என்று சொல்லுவது மிகையல்ல. எல்லா ஊழியங்களும் ஊழியர்களும் அப்படியா என்றால் இல்லை, ஆனால் 90% என்பது சற்றே குறைவான மதிப்பீடு என்று சொல்லும் அளவிற்கு மோசமே. உண்மை நேர்மை தியாகம் உழைப்பு அர்ப்பணிப்பு என்பவையெல்லாம் காலாவதியான சொற்றொடர்கள். ஊழியர்களின் நிலையே இதுவானால் சபை விசுவாசிகளின் நிலை அந்தோ பரிதாபம். ஒரு உண்மையை மறுப்பதற்கியலாது, சரியான மேய்ச்சல் இல்லாமல் தடுமாறுவோர் 90% என்பது அநேகமாக சரியான கணக்கீடாக இருக்கும்.
இப்போதிருக்கும் ஊழியர்கள் மூன்று வகை, 1 . அழைப்பு நிமித்தம் ஊழியர் 2. ஆர்வத்தின் நிமித்தம் ஊழியர் 3. ஆதாயத்தின் நிமித்தம் ஊழியர். இந்த மூன்று வகை ஊழியர்களில் அழைப்பு மற்றும் ஆர்வத்தின் நிமித்தமாக வந்த ஊழியர்கள் 10% மட்டுமே. அதிலும் ஆர்வத்தின் நிமித்தமாக ஊழியத்திற்கு வந்தவர்களுடைய விதிகாசாரம் சற்றே அதிகம் என்பது நிதர்சனமான உண்மையாகும். மீதமுள்ள 90% ஊழியர்கள் ஆதாயத்தின் நிமித்தமாக ஊழியத்திற்கு வந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இதில் ஆரம்பத்தில் ஆர்வத்தின் நிமித்தம் ஊழியத்தில் இணைந்து பின் ஊரோடு ஒத்து போன கதையாக ஆதாயத்திற்கு என்று தங்களை மாற்றிக்கொண்டவர்களும் அடங்குவர். இது தான் இன்றைய ஊழியமும் ஊழியர்களின் நிலையும் ஆகும்.
மேலே குறிப்பிட்ட நிலைபாடு என்பது இன்றைய ஊழியத்தின் தன்மையை நமக்கு பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அழைப்பின் நிமித்தம் ஊழியர் என்பவர் அவரும் அவர் சார்ந்த ஊழியமும் என்று ஒரு வட்டத்திற்குள்ளேயே நின்று விடுகிறது. அவரின் ஊழிய எல்லைக்கு வெளியே பெரிதாக நன்மை இருக்கிறதோ இல்லையோ தீமை நிச்சயம் இல்லை. ஆர்வத்தின் நிமித்தம் ஊழியத்திற்கு வந்தவரின் நிலையும் பரவாயில்லை என்றே சொல்லமுடியும், காரணம் தேவனுடைய நாமம் தூஷிக்கக் கூடாது என்பதில் அவர் நிச்சயம் கவனமாக இருப்பார். அதற்காக தன்னையும் தன் ஊழியத்தையும் தகுதி படுத்துவதன் மூலம் ஆயத்த படுத்துவதில் அவர் கவனம் இருக்கும். எனவே இவரும் சமுதாயத்திற்கும் ஊழியத்திற்கும் ஆதாயமே.
ஆனால் ஆதாயத்தின் நிமித்தம் ஊழியத்திற்கு வந்தவர்களின் நிலையால் தான் சபையும் சமுதாயமும் தள்ளாடுகிறது. பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். I தீமோத்தேயு : 6 : 10 ஆதாயத்தின் பலனை நம்பி வந்தவர்களின் வாழ்க்கையும் அவர்களின் செயல் பாடுகளையும் இவ் வசனத்தை அப்படியே பிரதிப்பலிக்கிறது மாத்திரமல்ல ஒரு படி மேலே போய் அவரால் சபையும் சமுதாயமும் சீரழிந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் இரண்டு வகையுண்டு ஒன்று அதிகாரக் கூட்டம் மற்றொன்று அதிகார வர்க்கத்தை அண்டியே வாழும் கூட்டம். ஒருவருக்கு பேரு புகழுமே பிரதானம் மற்றவருக்கு வயிறே பிரதானம்.
இப்படிப்பட்டவர்களை குறித்து பேதுரு எழுதின இரண்டாம் நிருபத்தில், கள்ள போதகர்கள் இருப்பார்கள், அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுக்களைக் தந்திரமாய் நுழையப்பண்ணி, அவர்களுடைய கெட்ட நடவடிக்கைகளை அநேகர் பின்பற்ற செய்வதன் மூலம் சத்திய மார்க்கம் துஷிக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறே பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபத்தில், மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக, எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காராராயும், அகந்தையுள்ளவர்களாயும், துஷிக்கிறவர்களாயும், தாய்தந்தைமாருக்குக் கிழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் ; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2 திமோத்தேயு : 3 : 1 – 5
இத் தீர்க்கமான வார்த்தைகளில் ஒன்றும் குறையாமல் இன்றைய ஊழியர்கள் இருப்பதை எண்ணி மனம் வலிக்கிறது. இப்படிப்பட்டவர்களை கொண்ட சபையும் சமுதாயமும் விழி பிதுங்கி கிடக்கிறது. மாற்றத்திற்கான வழி இயேசு கிறிஸ்துவே. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு. அறுவடைக்கான பணியில் கையளிப்போர் விரைந்து இணைந்து செயல் படும் தருணம் இதுவே. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு ஷணமும் அழிவின் விளிம்பிற்கு காலம் நம்மை இட்டு செல்லுகிறது என்பதை மறவாதிருப்போம். திக்கு தெரியாமல் திணறி தவிக்கும் சமுதாயம் ஒருபுறம், அழிவின் விளிம்பை நோக்கிய காலத்தின் வேகம் மறுபுறம் இவைகளுக்கு மத்தியில் நம்மை மீட்பதற்கான நீட்டப்பட்ட மீட்பரின் கரம்……..
நன்றி

சுவி.பாபு தா தாமஸ், இராணிப்பேட்டை

Photo: Background photo created by wirestock – www.freepik.com