Poems கவிதைகள்

அன்பே பிரதானம்

அன்பே பிரதானம்

ஆசையாக பாஷைகள் பல பேசினாலும்
நேசமான பாசமது உள மிலையெனில்
ஓசைமிகு கைத்தாளமே யான் வெறுமதிர்
ஒலியெழு வெண்கலமே என உணர்வேன்

வருஞ்செயல் உரைத்திடு வரமி ருந்தும்
மறைபொருள் அறிந்திடு தரமி குந்தும்
மலைநகர்த்தும் கலையறிந்தும் அன்பு நீங்கின்
சிலையளவே நிலையாகும் நிதம் அறிவேன்

அன்னதானம் ஆயிரம் தான் பண்ணியும்
என்னதான் நன்மையே நான் எண்ணியும்
என்சரீரம் நெருப்பிலிட உளம் நண்ணியும்
நேசம்நீக்கி வாசம்செயின் பயன் விண்ணுமோ?

மாற்று மொழிகளும் விரைந்து குறையுமே
மகிமை வரங்களும் பறந்து மறையுமே
அறிவின் முழுமையும் அழிந்து ஒழியுமே
அன்பின் தன்மையோ நிலைத்து நிற்குமே

எதிர்வரும் செயல்தனில் அதி விசுவாசம்
எதுவரினும் நிலைகுலையா திட நம்பிக்கை
இதயமதில் வழிந்தோடும் தூய அன்பு
இம்மூன்றில் அன்பதுவே நேய பண்பதுவாம்.

– தாரா (உலகிற்கு வார்த்தை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *